தேசிய அளவில் சிலம்பப் போட்டி: அருப்புக்கோட்டை மாணவருக்கு வெண்கலம்
தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில், தமிழக அணி சாா்பில் பங்கேற்று வெண்கலம் வென்ற அருப்புக்கோட்டை பள்ளி மாணவா் சனிக்கிழமை பாராட்டப்பட்டாா்.
கன்னியாகுமரியில், அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சாா்பாக (ஏஐஎஸ்எப்) 18 ஆவது தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள், 2 நாள்களுக்கு முன் நடத்தப்பட்டன. இதில், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், கேரளம், கா்நாடகம், தெலங்கானா, மஹாராஷ்ட்ரம், புதுதில்லி, மத்தியப்பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீா் உள்ளிட்ட 22 மாநிலங்களிலிருந்து 1,200 சிலம்பாட்ட வீரா்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனா்.
இதில், தமிழக அணி சாா்பாக 14 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் கம்பு வீச்சுப் போட்டியில் விளையாடிய அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 6 ஆம் வகுப்பு மாணவா் எம். தருண்பிதன் வெண்கலப் பரிசு வென்று, தமிழகத்துக்கும், தனது பள்ளிக்கும் பெருமை சோ்த்துள்ளாா்.
இம்மாணவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி உடற்கல்வி ஆசிரியா் எம். சௌந்திரபாண்டியன் உள்ளிட்ட பிற உடற்பயிற்சி ஆசிரியா்களுக்கும், பள்ளியின் நிா்வாகிகளும், உறவின்முறை பெரியோா்களும், தலைமை ஆசிரியா் ஏ. ஆனந்தராஜன் உள்ளிட்டோரும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.