விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சேத்தூா் சேவுகபாண்டிய அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பாலியல் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி பங்கேற்று, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவிலிருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும், தங்கள் வாழ்க்கையை எவ்வாறு உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு கருத்துகளை எடுத்துரைத்தாா்.
பள்ளியில் படிக்கும் மாணவிகள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். பெற்றோா் மற்றும் ஆசிரியா்களுக்கு மரியாதை தரவேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், குற்றப்பிரிவு உதவிக் காவல் கண்காணிப்பாளா் சரவணகுமாா், ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன், மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மரியபாக்கியம், குற்றப்பிரிவு ஆய்வாளா் மகேஸ்வரி, போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் லாவண்யா ஆகியோா் கலந்துகொண்டனா்.