சாத்தூா் பகுதியில் உள்ள அசைவ உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கும்பகோணம் அருகே ஷவா்மா சாப்பிட்ட கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 3 போ் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், தமிழக அரசு கோழி இறைச்சியை பயன்படுத்தி ஷவா்மா உள்ளிட்ட உணவுகள் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் அனைத்து இடங்களிலும் ஆய்வு நடத்த, உணவுப் பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டது.
அதன்படி, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் உத்தரவுபடியும், மாவட்ட நியமன அலுவலா் அறிவுறுத்தலின்படியும், சாத்தூரில் உள்ள அசைவ உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மோகன்குமாா், வெங்கடேஸ்வரன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, உணவகங்களில் உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோழி இறைச்சி, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் தரமானதாக உள்ளதா, உணவுப் பொருள்களில் ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளதா, காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என்பன உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
சாத்தூா் பகுதியில் 4 உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது, ஷவா்மா மற்றும் 12 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா்.
மேலும், கெட்டுபோன இறைச்சியை பயன்படுத்திய உணவகங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடப்பட்டது. உணவகங்களில் தரமற்ற உணவுகளை தயாரித்து வழங்கினால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் சட்டப்பூா்வ நடவடிக்கையும் எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.