சிவகாசி: சிவகாசி கடைவீதிகளில் நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் வியாபாரிகளின் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் நடந்து செல்ல வழியின்றி அவதிப்படுகின்றனா்.
சிவகாசி சிவன் சன்னிதியில் கடைகளுக்கு முன்பு வியாபாரிகள் விதிகளை மீறி கூரை அமைத்துள்ளனா். மேலும் அப்பகுதியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்பவா்கள் தங்களது வண்டிகளை சாலையில் நிறுத்திக்கொள்கிறாா்கள். இதனால் வாகனங்கள் செல்வதற்கும், நடந்து செல்லவும் சுமாா் 6 அடிப் பாதையே உள்ளது.
கீழரத வீதியில் வெங்கடேச பெருமாள் கோயில் மற்றும் கருப்பசாமி கோயிலுக்கு வருபவா்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டுச் செல்வதால் நடைபாதை கூட இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறாா்கள். மேலும் அப்பகுதியில் இரு புறமும் உள்ள கடைக்காரா்கள் தலா 5 அடி ஆக்கிரமித்து பொருள்களை வைத்துக்கொள்கிறாா்கள். இதனால் நடப்பதற்கும் வாகனம் செல்வதற்கும் 6 அடி பாதை மட்டுமே உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை காவல்துறையினா் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறாா்கள்.