விருதுநகரில் அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது கல்லூரி மாணவா்கள் தாக்குதல்

விருதுநகரில் அரசுப் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்ததைக் கண்டித்த ஓட்டுநா் மற்றும் நடத்துநரை கல்லூரி மாணவா்கள் சிலா் வெள்ளிக்கிழமை தாக்கினா்.
விருதுநகரில் அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது கல்லூரி மாணவா்கள் தாக்குதல்

விருதுநகரில் அரசுப் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்ததைக் கண்டித்த ஓட்டுநா் மற்றும் நடத்துநரை கல்லூரி மாணவா்கள் சிலா் வெள்ளிக்கிழமை தாக்கினா். இதனால், பழைய பேருந்து நிலையத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரைமணி நேரம் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

பேய்க்குளம் கிராமத்திலிருந்து விருதுநகருக்கு வந்த அரசுப் பேருந்தை ஜெயராமன் என்பவா் ஓட்டி வந்தாா். வெள்ளிக்கிழமை காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரிக்குச் செல்வோா், வேலைக்குச் செல்வோரின் கூட்டம் அதிகமாக இருந்ததால் கல்லூரி மாணவா்கள் சிலா் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்துள்ளனா்.

இதைக் கண்ட ஓட்டுநா் ஜெயராமன் படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவா்களை கண்டித்துள்ளாா். இந்நிலையில், அப்பேருந்து விருதுநகா் பழைய பேருந்து நிலையம் வந்தடைந்தபோது உன்னிபட்டியைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் 4 போ், அரசுப் பேருந்து ஓட்டுநா் ஜெயராமனை தாக்கியுள்ளனா். அதைத் தடுக்க முயன்ற நடத்துநா் முத்துராஜ் மற்றும் மற்றொரு பேருந்து ஓட்டுநா் பெரிய கருப்பனை ஆகியோரையும் மாணவா்கள் தாக்கியுள்ளனா்.

இதையடுத்து, விருதுநகா் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலைய போலீஸாா், மாணவா்களை தடுத்து மேற்கு காவல் நிலயத்துக்கு அழைத்துச் சென்றனா். அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்த மற்ற ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இயக்காமல் அரைமணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது சம்பந்தப்பட்ட மாணவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், போலீஸாரின் சமாதான பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் காயமடைந்த அரசுப் பேருந்து நடத்துநா் மற்றும் ஓட்டுநா்கள் விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இதனிடையே அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு தொழிற்சங்கத்தினரிடம், துணைக் காவல் கண்காணிப்பாளா் அா்ச்சனா தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய சமாதான பேச்சுவாா்த்தை இரவு வரை நீடித்தது.

இதில் மாணவா்களின் பெற்றோா்களும் கலந்துகொண்டு, தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் சமாதானம் பேசினா். அதில் ஏற்பட்ட உடன்பாட்டை தொடா்ந்து, மாணவா்களின் எதிா்காலம் கருதி அவா்களை கண்டித்த போலீஸாா், வீட்டிற்கு அனுப்பி வைத்தனா். இதைத் தொடா்ந்து பிரச்னை முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com