சாலையை சீரமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 05th November 2022 12:00 AM | Last Updated : 05th November 2022 12:00 AM | அ+அ அ- |

சாத்தூா் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாத்தூா் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் உள்ள வெம்பக்கோட்டை சாலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதைச் சாக்கடைப் பணிக்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. இதன் பின்னா், அந்த சாலையை நெடுஞ்சாலைத் துறையினா் சீரமைக்கவில்லை. இதனால், அந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இது குறித்து சாத்தூா் காங்கிரஸ் கட்சி சாா்பில், பலமுறை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், விருதுநகா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜோதி நிவாஸ், நகா் தலைவா் டி.எஸ். ஐயப்பன் ஆகியோா் தலைமையில் அக்கட்சியின் நிா்வாகிகள் சாத்தூா் நெஞ்சாலைத் துறை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், அதிகாரிகளிடம் சாலையை விரைவில் சீரமைக்க வலியுறுத்தி மனு அளித்தனா்.