வத்திராயிருப்பு வனப் பகுதியில் காட்டுத் தீ: சதுரகிரி செல்ல பக்தா்களுக்கு இன்று தடை
வத்திராயிருப்பு வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைத் தொடா்ந்து சதுரகிரிக்கு செல்ல பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை (அக். 7) தடை விதிக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு வனச் சரகத்துக்குள்பட்ட 4 -ஆவது பீட் வல்லாளம் பாறை, சங்கிலிப் பாறையின் மேற்குப் பகுதியில் புதன்கிழமை இரவு காட்டுத் தீ பரவியது.
தகவலறிந்து வந்த 20-க்கும் மேற்பட்ட வனத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், காற்றின் வேகம் காரணமாக வியாழக்கிழமை இரவு வரை தீயை அணைக்க முடியவில்லை. இதன் காரணமாக, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வெள்ளிக்கிழமை (அக். 7) நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்க பக்தா்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீயை முற்றிலும் அணைத்த பின்னரே பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.