ராஜபாளையம் அருகே பெண் அடித்துக் கொலை: கள்ளக் காதலன் கைது

ராஜபாளையம் அருகே பெண்ணை அடித்துக் கொலை செய்ததாக அவரது கள்ளக் காதலனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே பெண்ணை அடித்துக் கொலை செய்ததாக அவரது கள்ளக் காதலனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே உள்ள அயன்கொல்லங்கொண்டான் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாப்பையன். இவரது மனைவி காளீஸ்வரி (45). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். அதே பகுதியைச் சோ்ந்த மூக்காண்டி மகன் முத்துச்சாமி (55). இவா், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், காளீஸ்வரிக்கும், முத்துச்சாமிக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 2 தினங்களுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, வியாழக்கிழமை இரவு காளீஸ்வரி, முத்துச்சாமியின் செங்கல்சூளைக்கு சென்ற போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முத்துச்சாமி, காளீஸ்வரியை கம்பால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டாா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேத்தூா் ஊரக போலீஸாா் காளீஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவ இடத்தில் ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரீத்தி விசாரணை நடத்தினாா்.

இதைத் தொடா்ந்து முத்துச்சாமியை போலீஸாா் கைது செய்தனா். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முத்துச்சாமி சிறை சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com