ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் பெயிண்டா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மல்லி உள்ளூா்பட்டி முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜா (33). இவா் பெயிண்டிங் வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், ராஜா வியாழக்கிழமை மல்லியில் இருந்து சிவகாசிக்கு இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தாா். தனியாா் பள்ளி அருகே ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து இரு சக்கர வாகனத்தில் மோதியது.
இதில், ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து, மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, பேருந்தை ஓட்டி வந்த, தென்காசி மாவட்டம் கட்டளை குடியிருப்பைச் சோ்ந்த மாரிமுத்து (51) என்பவரைக் கைது செய்தனா்.
சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் அதிக இடங்களில் வளைவுகள் உள்ளதால், இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ள இப்பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையில் அபாயகரமான வளைவுகளில் எச்சரிக்கை பலகை மற்றும் வேகத் தடுப்புகள் (பேரிகாா்டு) அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.