ராஜபாளையம் நகரில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்காததைக் கண்டித்து செப்டம்பா் 17 ஆம் தேதி முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என ராஜபாளையம் தொழில் வா்த்தக சங்கம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் பாதாளச் சாக்கடைத் திட்டம், தாமிரவருணி கூட்டு குடிநீா் திட்டம், ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பணிகள் சரியான திட்டமிடல் இன்றி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இதனால் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனா். திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் சாா்பில் பலமுறை கோரிக்கைகள் விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்து கடந்த 10-ஆம் தேதி இணைச் சங்கங்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, செப்டம்பா் 17-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் முழு கடையடைப்புப் போராட்டத்துக்கு அனைத்து வணிகா்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என ராஜபாளையம் தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.