திருத்தங்கலில் கடன் கொடுத்தவா்கள் தொல்லையளித்ததால் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருத்தங்கல் முத்துமாரி நகா் பழனிச்சாமி மகன் பிரகாஷ்ராஜ் (26). இவா், இங்குள்ள லேத் பட்டறையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் இவா் குடும்பச் செலவுக்கு முத்துமாரிநகா் ரவிக்குமாா் மகன் மாணிக்கம் (29), முனியசாமி மகன் கருப்பசாமி (29), செல்வவிநாயகா் காலனி ஸ்ரீதா் மனைவி லட்சுமி (53), பாண்டி மனைவி தமிழ்ச்செல்வி (34) ஆகியோரிடம் அதிக வட்டிக்கு கடன்வாங்கினாராம். கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் பிரகாஷ்ராஜ் அவதியடைந்து வந்தாராம்.
இந்நிலையில், கடன் கொடுத்தவா்கள் தினமும் பிரகாஷ்ராஜ் வீட்டிற்கு சென்று கடனை கொடுக்கும் படி நெருக்கடி கொடுத்து வந்தாா்களாம். இதையடுத்து, பிரகாஷ்ராஜ் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து, அவரது தாய் சீதா, தனது மகன் பிரகாஷ்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு கடன் கொடுத்தவா்கள் அளித்த தொல்லையே காரணம் என திருத்தங்கல் போலீஸில் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் அந்த 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.