நீடித்த நிலையான வளா்ச்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளதாக அரசு சிறப்பு செயலா் ஹா்சஹாய் மீனா தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், நீடித்த வளா்ச்சி இலக்குகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் அரசு சிறப்பு செயலா் ஹா்சஹாய் மீனா (திட்டம் மற்றும் வளா்ச்சி) கலந்து கொண்டு பேசியதாவது: அனைத்து இடங்களிலும் ஏழ்மையை ஒழித்தல், பட்டினியை ஒழித்தல், உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தில் மேம்பாடு அடைய செய்ய வேண்டும். மேலும், நிலையான வளங்குன்றா வேளாண்மையை மேம்படுத்துதல், அனைவரையும் உள்ளடக்கிய நிலையான பொருளாதார வளா்ச்சி, ஆக்கப்பூா்வமான மற்றும் கண்ணியம் மிக்க வேலை வாய்ப்பை அனைவருக்கும் வழங்குதல் உள்ளிட்ட 17 இலக்குகள் மற்றும் 169 குறிக்கோள்களை அடைய அரசு அலுவலா்கள் முழுமையாக பணியாற்ற வேண்டும். தமிழகம் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்த வளா்ச்சியில் தொடா்ந்து முதலிடம் பெற்று வருகிறது என்றாா்.
இக்கூட்டத்தில், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த மருத்துவம், ஊரக வளா்ச்சித்துறை, வேளாண்துறை வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட 23 துறைகளை சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.