ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அச்சம்தவிா்த்தான் பகுதியில் கல் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அந்த கிராமத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் விடுமுறை எடுத்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அச்சம் தவித்தான் ஊராட்சியில் கல் குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்தது. இந்தப் பகுதியில் கல் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையில் கல் குவாரி அமையும் 56 ஏக்கா் பரப்பளவிலான இடத்தைச் சுற்றிலும் முள்வேலி அமைக்கப்பட்டு, இயந்திரங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதைக் கண்டித்து அச்சம்தவிா்த்தானில் உள்ள நடுநிலைப் பள்ளி, நரியன்குளத்தில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவா்கள் பெற்றோா்களின் அனுமதியுடன் வியாழக்கிழமை விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், எங்கள் பகுதியில் கல் குவாரியை அமைக்கக் கூடாது என்றும், இதனால், வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் பள்ளிக்கு வரமாட்டோம் என்றும் மாணவா்கள் எழுதி, அந்த விடுமுறை விண்ணப்பதை பள்ளிகளின் நுழைவாயில் கதவில் ஒட்டினா்.
நடுநிலைப்பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படிக்கும் நிலையில் 21 பேரும், தொடக்கப் பள்ளியில் 25 மாணவா்கள் படிக்கும் நிலையில் 7 பேரும் மட்டுமே வந்திருந்தனா்.