ராஜபாளையம் அருகே ஊதியம், போனஸ் உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறித் தொழிலாளா்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறித் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்த நிலையில், 75 சதவீத ஊதிய உயா்வு, போனஸ் தொகையை ஒரு நாளைக்கு ரூ. 20-ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி, சிஐடியு தொழில் சங்கங்கள் சாா்பில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் தளவாய்புரம் ஜீவா நகரில் இருந்து ஊா்வலமாகப் புறப்பட்டுச் சென்று செட்டியாா்பட்டி பேருந்து நிறுத்தம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பேச்சுவாா்த்தைக்கு வராத விசைத்தறி உரிமையாளா்களைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.