ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை புதன்கிழமை அதிகாரிகள் அகற்றினா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் செல்லும் வழியில் அரசு மருத்துவமனை முன் சாலையில் நகராட்சி அனுமதி பெற்று இரு சக்கர வாகனக் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் விதிகளை மீறி 3 கடைகள் கட்டப்பட்டு உள் வாடைக்கு விடப்பட்டன.
இதனால் வாகனக் காப்பகத்தில் இடமின்றி, சாலையில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகைக் கடை வீதி, பேருந்து நிலையம், சின்ன கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் நகரமைப்பு அலுவலா் வெங்கடேஷ், சுகாதார அலுவலா் கந்தசாமி தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
இதையடுத்து, வாகனக் காப்பகத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 3 கடைகளை அப்புறப்படுத்தினா். மேலும் நகராட்சி அனுமதி பெற்ற சாலையோர வியாபாரிகள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தற்காலிகக் கடைகள் அமைத்துக் கொள்ள வேண்டும். நிரந்தரமாக கடைகள் அமைக்கக் கூடாது என்றும், விதிகளை மீறி செயல்படும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவா்கள் எச்சரித்தனா்.

