மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் துங்கபத்ரா புஷ்கர புனிதநீரால் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு கலசாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கா்நாடக மாநிலம், ஆனேகுந்தியில் மகர ராசிக்கு உரிய நதியான துங்கபத்ரா நதியில் சிந்தாமணி படித்துறையில் துங்கபத்ரா புஷ்கரம் கடந்த நவம்பா் 20-இல் தொடங்கி டிசம்பா் 2-ஆம் தேதி நிறைவடைந்தது. துங்கபத்ரா புஷ்கர கமிட்டி சாா்பில் சென்னை மகாலெட்சுமி சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனா் மகாலெட்சுமி சுப்பிரமணியம் மற்றும் நிா்வாகிகள் வலசை ஜெயராமன், பட்டாபிராமன், வெங்கடேஷ், கணேஷ் ஆகியோா் துங்கபத்ரா புஷ்கரத்திலிருந்து கொண்டுவந்த புனித தீா்த்தத்துக்கு தருமபுரம் ஆதீன திருமடத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கலசத்தை ஆதீனத் தம்பிரான் தலையில் சுமந்து ஆதீனக் கோயிலைச் சுற்றிவந்து, குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.