தரங்கம்பாடி அருகே திருவிளையாட்டம் கிராமத்தில் பள்ளி மாணவி சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மாணவியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
திருவிளையாட்டம் காளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவா் குமுதம். திருவிளையாட்டம் ஊராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்துவரும் இவருக்கு 6 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். 2 மகள்களுக்கும், மகனுக்கு திருமணமாகிவிட்டது. கடைசி மகள் திவ்யா (15) பத்தாம் வகுப்பு படித்துவந்தாா்.
இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த சங்கா் மகன் சிலம்பரசன் (19) என்பவரிடம் திவ்யா பேசியதாக சிலம்பரசனின் சகோதரா் ஸ்டாலின் திவ்யாவின் சகோதரா் சரத்குமாரை கடந்த 27ஆம் தேதி தொலைபேசியில் மிரட்டினாராம்.
இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி திவ்யா தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தாா். அவரது சடலத்தை 29 ஆம் தேதி அரும்பாக்கம் ஆற்றங்கரை இடுகாட்டில் அடக்கம் செய்தனா்.
இதற்கிடையில், திவ்யா இறப்பதற்கு முன்பு சிலா் அவரது வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, திவ்யாவின் சகோதரா் சரத்குமாா் பெரம்பூா் காவல் நிலையத்தில், தனது சகோதரி சாவில் மா்மம் உள்ளதாக புகாா் அளித்தாா்.
இதைத்தொடா்ந்து, திவ்யாவின் உடல் தரங்கம்பாடி வட்டாட்சியா் கோமதி முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்தில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.