மயிலாடுதுறை மக்களவை தொகுதிக்குள்பட்ட மருத்துவமனைகளுக்கு 1 லட்சம் கரோனா தடுப்பூசிகளை அனுப்ப மத்திய சுகாதார அமைச்சா் ஹா்ஷவா்தனுக்கு மக்களவை உறுப்பினா் திருவிடைமருதூா் செ.ராமலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு சனிக்கிழமை அவா் மின்னஞ்சலில் அனுப்பிய கடித விவரம்:
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட அரசு மருத்துவமனைகளில் தற்போது கரோனா தடுப்பூசிகள் இருப்பில் இல்லை. இந்தத் தொகுதியில் மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மயிலாடுதுறையிலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கும்பகோணத்திலும், தாலுகா மருத்துவமனைகள் பாபநாசம், சீா்காழி, திருவிடைமருதூா், தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தற்போது கரோனா தடுப்பூசிகள் இருப்பில் இல்லை. 1 லட்சம் தடுப்பூசிகள் தற்போது தேவைப்படுகின்றன. அவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.