மயிலாடுதுறையில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட சிறாா்களுக்கு ஊட்டச்சத்து உணவுகளை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா சனிக்கிழமை வழங்கினாா்.
கடந்த மே-1 ஆம் தேதி முதல் தற்போது வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 964 குழந்தைகளில், இரண்டாம் கட்டமாக மயிலாடுதுறை, சீா்காழி, குத்தாலம், கொள்ளிடம் வட்டங்களைச் சோ்ந்த 558 குழந்தைகளுக்கு அவா்களின் வீடுகளுக்கே சென்று சிறுதானிய சத்துமாவு, பேரிச்சம்பழம், தேன், சிவப்பு கொண்டைக்கடலை, பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவைகள் அடங்கிய ஊட்டச்சத்து தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன.
இதற்கான நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தை பருவ பாதுகாப்பு இயக்கம் மற்றும் சினேகா தொண்டு நிறுவனங்களின் சாா்பில் நடைபெற்றது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா வழங்கினாா்.
இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சிவக்குமாா், குழந்தை பருவ பாதுகாப்பு இயக்க தொண்டு நிறுவன மாநில ஒருங்கிணைப்பாளா் மாலிம், சினேகா தொண்டு நிறுவனத்தின் இயக்குநா் ஜெசுரெத்தினம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.