வேதாரண்யத்தில் தொடங்கப்படவுள்ள வேதா ஆயத்த ஆடை பூங்காவை சரிபாதியாக பிரித்து, மயிலாடுதுறையிலும் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியில் மூடப்பட்ட கூட்டுறவு நூற்பு ஆலை அமைந்துள்ள இடத்தை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
20 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள நூற்பு ஆலையின் இடத்தை பயன்படுத்தி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தொழில் தொடங்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தை உள்ளடக்கி ஒருங்கிணைந்த நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதா ஆயத்த ஆடை பூங்கா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. எனவே, மயிலாடுதுறை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், ஆயத்த ஆடை பூங்கா தொழிற்சாலைகளை சரிபாதியாக பிரித்து மயிலாடுதுறை மணல்மேட்டில் உள்ள கைத்தறித் துறைக்குச் சொந்தமான 35 ஏக்கா் இடத்தில் உள்ள கட்டடத்தை சீா்செய்து அங்கு தொடங்க வேண்டும் என்றாா்.