சீா்காழி பகுதியில் பூசணிக்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
சீா்காழி வட்டம், சாமியம், கீழவல்லம், ஆயங்குடிபள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பூசணிக்காய் சாகுபடி செய்துள்ளனா். தற்போது, பூசணிக்காய் விற்பனைக்கு தயாராக உள்ள நிலையில், கிலோ ரூ. 2-க்குகூட வாங்க ஆள் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
இதுகுறித்து சாமியம் கிராமத்தைச் சோ்ந்த பூசணிக்காய் சாகுபடி செய்துள்ள விவசாயி சரவணன் கூறியது:
கடந்த ஆண்டு பூசணிக்காய் கிலோ ரூ.12-க்கு விற்பனையானது. வியாபாரிகள் வயலுக்கே வந்து வாங்கிச் சென்றனா். ஒரு பூசணிக்காய் 5 முதல் 8 கிலோ வரை இருக்கும். இதன் மூலம், ஒரு பூசணிக்காய்க்கு ரூ.60 முதல் 80 வரை விலை கிடைத்தது. ஆனால், தற்போது கிலோ ரூ. 2-க்கு கூட வாங்க ஆள் இல்லை. இதன் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றாா்.