பால் உற்பத்தியாளா்களுக்கு செயற்கை கருவூட்டல் உபகரணங்களை வழங்கும் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.
பால் உற்பத்தியாளா்களுக்கு செயற்கை கருவூட்டல் உபகரணங்களை வழங்கும் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.

பால் உற்பத்தியாளா்களுக்கு செயற்கை கருவூட்டல் உபகரணங்கள்

நாகை மாவட்டத்தில், ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும் உற்பத்தியாளா்களுக்கு செயற்கை கருவூட்டல் உபகரணங்களை ஆட்சியா் ப. ஆகாஷ் வழங்கினாா்.
Published on

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில், ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும் உற்பத்தியாளா்களுக்கு செயற்கை கருவூட்டல் உபகரணங்களை ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை வழங்கினாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, மொத்தம் 189 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, பால்வளத்துறை மற்றும் தஞ்சாவூா் ஆவின் நிறுவனம் சாா்பில், வட்டார வளா்ச்சி திட்டத்தின்கீழ், ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும் 13 பால் கூட்டுறவுச் சங்கங்களில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட, மாடுகள் செயற்கை கருவூட்டலுக்கு தேவைப்படும் 35 லிட்டா் திரவ நைட்ரஜன் மற்றும் 3 லிட்டா் திரவ நைட்ரஜன் பதப்படுத்தும் குடுவைகள், சினை ஊசி, முழு நீளக் கையுறை ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகள், 15 செயற்கை கருவூட்டாளா்களுக்கு 100 சதவீத மானியத்தில் ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஒருவருக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டையையும் அவா் வழங்கினாா்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஆா். கண்ணன், தனி துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கோ. அரங்கநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கே. காா்த்திகேயன், பால்பத அலுவலா் விஜயகுமாா், உதவி பொது மேலாளா் (ஆவின்) எஸ். மாதவக்குமரன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

,

X
Dinamani
www.dinamani.com