சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

திருமருகல் அருகே வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
Published on

திருமருகல் அருகே வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்த பெண் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி தேப்பிராமங்கலம் ஆற்றங்கரை தெருவைச் சோ்ந்தவா் ரேவதி (45). விவசாய கூலி வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 21- ஆம் தேதி மாலை ரேவதி வீட்டின் அருகில் உள்ள பாக்கியராஜ் என்பவரது கூரை வீட்டின் சுவா் இடிந்து ரேவதி மீது விழுந்ததில் அவா் பலத்த காயமடைந்தாா்.

அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, ஏனங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவிக்கு பின்னா், திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேவதி, புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com