காரைக்கால் மாவட்டம், அகலங்கண்ணு பகுதியில் 12 நாள்கள் நடைபெற்ற காவிரி மகா புஷ்கரம் விழா தீர்த்தவாரியுடன் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
காரைக்கால் மாவட்டம், அகலங்கண்ணு பகுதி அரசலாற்றில் காவிரி மகா புஷ்கரம் விழா கடந்த 12-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது. முதல் நாளில் இருந்து தினமும் சிவன் மற்றும் பெருமாள் கோயில்களிலிருந்து சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தீர்த்தவாரியில் புனித நீராடினர்.
நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பிற்பகல் 3 மணியளவில் திருமலைராயன்பட்டினம் நடனகாளியம்மன் கோயில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணியர், அகலங்கண்ணு கிராமத்திலிருந்து ஸ்ரீ வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தீர்த்தக்கரைக்கு எழுந்தருளினர்.
பின்னர், அஸ்திரத் தேவர், செல்வர் தீர்த்தவார் நடைபெற்றது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன், நிர்வாக அதிகாரி (கோயில்கள்) எஸ்.கே.பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் வி.சண்முகசுந்தரம், செயற்பொறியாளர் ஜி.இளஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சி விழா ஏற்பாட்டாளர்கள், கோயில் நிர்வாகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் சால்வை அணிவித்தார்.