குற்றம் செய்த துணை பேராசிரியருக்கு ஆதரவாக, போராட்டங்களைத் தூண்டிவிட்டதாகக் கூறி கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்க காரைக்கால் பிரிவு சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் எஸ்.ஆனந்த்குமார் தலைமை வகித்தார். காரைக்கால் பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், அண்மையில் துணைப் பேராசிரியர் ஒருவர், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மாணவர்களை போராடத் தூண்டிய ஆசிரியர்கள் மற்றும் அதற்கு துணை போன கல்லூரி முதல்வர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் மற்றும் தலைமைச் செயலாளர் அதற்கு உத்தரவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது. ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள், ஆதரவு அமைப்பை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.