மலேசிய தொழில் சம்மேளனத்தினர் காரைக்காலில் பல்வேறு கோயில்களுக்கு செல்லும் போது திருநள்ளாறில் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனை சனிக்கிழமை சந்தித்தனர்.
புதுச்சேரியில் 5-ஆவது உலக தமிழர் பொருளாதார மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த மலேசிய - இந்திய தொழில் வர்த்தக சபைத் தலைவர் கென்னத் ஈஸ்வரன் தலைமையிலான 37 பேர் கொண்ட குழுவினர் காரைக்கால் மாவட்டத்தில் கோயில்களில் தரிசனம் செய்ய சனிக்கிழமை புதுச்சேரியிலிருந்து வந்தனர்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்த இக்குழுவினர், திருநள்ளாறில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினர். மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவனும் உடனிருந்தார்.
மலேசிய - இந்திய தொழில் வர்த்தக முன்னேற்றம் குறித்து மலேசிய குழுவினர் அமைச்சரிடம் சிறிது நேரம் பேசினர். காரைக்கால் மாவட்டத்தில் தொழில்துறை மேம்பாட்டுக்கான சாதகமான அம்சங்களை அமைச்சர் அவர்களிடம் எடுத்துக்கூறினார். மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்கள் இருப்பதை தெரிவித்த அமைச்சர், அவர்கள் வழிபாடு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துதர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.