ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்றித் தருமாறு புதுச்சேரி உயர்கல்வித் துறை அமைச்சரிடம் கல்லூரி உதவி பேராசிரியர்கள் வலியுறுத்தினர்.
காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள், புதுச்சேரி வேளாண் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனை காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பு குறித்து அண்ணா கல்லூரி உதவி பேராசிரியர் வி.சந்திரசேகரன் கூறியது : 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை உதவி பேராசிரியர்களுக்கு 1.1.2016 முதல் நிறைவேற்றித்தரவேண்டும். கடந்த 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருப்பதை ஆராய்ந்து, பதவி உயர்வு தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அமைச்சரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து ஆவன செய்வதாகக் கூறிய அமைச்சர், கல்லூரி பேராசிரியர்களின் பணிகள் குறித்து சில கருத்துகளைக் கூறினார். அனைத்துப் பேராசிரியர்களும் கல்லூரியின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடவேண்டும். மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் மூலம் ஒழுக்கத்தையும், வேலைவாய்ப்புக்குரிய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் பயிற்சியையும் அளிக்கவேண்டும். காலை உணவை தவிர்த்து கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் பலர் வருவதால் உடல் ரீதியாக பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். வெளி உதவிகளைப் பெற்று கல்லூரியில் மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கவும், மாணவ, மாணவியரின் திறனை மேம்படுத்தவும் பேராசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக அவர் கூறினார்.