காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் திருவோண திருநாளையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வாமன ஜயந்தியையொட்டி ஓணம் வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. பகல் நேரத்தில மூலவர் ரங்கநாதர், உத்ஸவர் நித்யகல்யாண பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெற்றன. இரவு நிகழ்வாக, ரங்கநாயகித் தாயார் சன்னிதியில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார்.
பெருமாளுக்கு எதிரே அத்தப்பூ கோலமிடப்பட்டிருந்தது. கோலத்தின் மையப் பகுதியில் குத்துவிளக்கேற்றி பக்தர்கள் உத்ஸவ பெருமாளையும், மூலவரான ரங்கநாத பெருமாளையும் வழிபட்டனர். அத்தப்பூ கோலத்தை சுற்றி பெண்கள் கோலாட்டமாடினர். நித்யகல்யாண பக்த ஜன சபாவினர், பக்தர்கள் பஜனை நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினர், கோயில் அறங்காவல் வாரியத்தினர் செய்திருந்தனர்.