புதருக்குள் மறைத்து வைத்திருந்த 700 லிட்டர் சாராயம் பறிமுதல்

காரைக்கால் அருகே புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 700 லிட்டர் சாராயத்தை சிறப்பு காவல் படையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். 

காரைக்கால் அருகே புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 700 லிட்டர் சாராயத்தை சிறப்பு காவல் படையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். 
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி ஏப்ரல் 16 முதல் 18-ஆம் தேதி வரை கள்,  சாராயக்கடை, மதுபானக் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் இயங்கும் மது கூடங்களுக்கு விடுமுறை அறிவிப்பை கலால் துறை செய்துள்ளது. இதையொட்டி, மறைவிடங்களில் மது விற்பனை நடைபெறக்கூடும், அதற்காக மது வகைகள் பதுக்கி வைக்க வாய்ப்புண்டு என்பதை கருத்தில்கொண்டு சிறப்பு காவல் படையினர் உள்ளிட்டோர் தீவிரமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். 
இந்நிலையில், நெடுங்காடு பகுதி குளக்குடி கிராமத்தில், வாய்க்காலில் மண்டிக் கிடக்கும் கோரைப்புல் நடுவே சாராயக் கேன்கள் பதுக்கி வைத்திருப்பதாக உதவி ஆய்வாளர் பிரவீன் தலைமையிலான சிறப்பு காவல் படை குழுவினருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
சிறப்பு காவல்படை ஆய்வாளர் மரியகிறிஸ்டின் பால் உள்ளிட்ட மேற்கண்ட குழுவினர் குறிப்பிடப்பட்ட பகுதிக்குச் சென்றனர். கோரைப்புல் புதருக்கிடையே 10 கேன்களில் சாராயம், 100 மிலி பாக்கெட்டுகள் என சுமார் 700 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. இவற்றை கைப்பற்றிய போலீஸார், நெடுங்காடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கடை விடுமுறை 3 நாள்கள் வரவுள்ள நிலையில், வியாபாரத்துக்காக இவை பதுக்கிவைத்திருக்கக் கூடும் அல்லது தேர்தல் சமயமாக உள்ளதால் விநியோகத்துக்காகக்கூட இருக்கலாம். தகவல் கிடைத்தவுடன் விரைவாகச்  சென்று அவற்றை பறிமுதல் செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com