காரைக்கால் அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் வளர்ச்சிக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. தலைவர் ராஜலட்சுமணன் தலைமை வகித்தார்.
இதில், காரைக்கால் மக்கள் தொகை அடிப்படையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய புதுச்சேரி அரசு முன்வரவேண்டும். காரைக்காலில் அனைத்து அரசுத்துறைகளிலும் நிலவும் காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பவேண்டும்.
காரைக்கால் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையத்தை ஓய்வுபெற்ற ஆசிரியர்களைக்கொண்டு நடத்த ஏற்பாடு செய்யவேண்டும். காரைக்கால் - பேரளம் அகல ரயில்பாதைப் பணியை விரைந்து தொடங்கி, குறித்த காலக்கெடுவுக்குள் நிறைவேற்றவேண்டும். காரைக்காலில் விமான நிலையம் அமைக்க விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி, ஏற்றுமதியின் மூலம் ஏற்படும் மாசினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீடுகள், நிறுவனங்களில் சூரிய மின்சாரம் தயாரிக்க அரசு ஊக்கமளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பொன்.வேலாயுதம், புத்திசிகாமணி, பி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செயலர் எம்.பாலமுருகன் நன்றி கூறினார்.