குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரியும் பன்றிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எனவும், மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
காரைக்கால் நகராட்சி ஆணையர் எஸ்.சுபாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பொது இடங்களிலும், மக்கள் வசிக்குமிடங்களிலும், சாலைகளிலும் பன்றிகள் திரிந்து வருகின்றன. குறிப்பாக மேலஓடுதுறை கிராமத்தில் வாழை, தென்னங்கன்றுகளை பகல், இரவு நேரத்தில் நாசம் செய்து வருகின்றன.
ரெயின்போ நகர், பாரீஸ் நகர், ஆசிரியர் நகர், கணபதி நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு நகர்களில் சாக்கடைகளைக் கிளறி துர்நாற்றம் ஏற்படுத்தும் காரணியாக பன்றிகள் திகழ்கின்றன. இதனால் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுகின்றன.
இது சம்பந்தமாக பன்றி வளர்ப்போருக்கு பல முறை எச்சரிக்கை விடுத்தும் உரிய இடத்தில் வளர்க்க அவர்கள் முன்வரவில்லை. எனவே இந்த அறிவிப்பை இறுதியாக கருதி, பன்றிகள் திரிய விடுவதைக் கைவிடவேண்டும். அதற்கான பட்டியில் அடைத்து வளர்க்க வேண்டும். மீறினால் பன்றிகளை நகராட்சி நிர்வாகம் பிடிப்பதோடு, அவை மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கப்படாது. விதியை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.