சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
காரைக்கால் பகுதி அக்கரைவட்டத்தைச் சேர்ந்தவர் ஒரு பெண் சர்க்கரை நேயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு துணையாக இவரது 15 வயது மகள் இருந்துள்ளார்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த எபி (எ) எபிநேசர் (24) அவர்களுக்கு உதவி செய்துள்ளார். அந்த வகையில், மருத்துவமனையில் இருந்து சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக்க கூறி, நிரவி அக்கரைவட்டம் செல்லும் சாலையில் மறைவான இடத்துக்கு அவரை அழைத்து சென்று எபிநேசர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து நிரவி போலீஸார் வழக்குப்பதிந்து, எபிநேசரை கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. இருதரப்பு வாதங்கள், சாட்சியங்கள் விசாரணை நிறைவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. செசன்ஸ் நீதிபதி கார்த்திகேயன், குற்றவாளியான எபிநேசருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.