திருநள்ளாறு பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்து, இளைஞர் ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் மாணவர்கள், இளைஞர்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமையாவதாகவும் மாவட்ட நிர்வாகம், காவல்துறைக்கு பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன. மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா பிறப்பித்த உத்தரவின்பேரில், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பன்வால் அறிவுறுத்தலின்பேரில், சிறப்பு அதிரடிப்படை பிரிவு உதவி ஆய்வாளர் பிரவீன்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், திருநள்ளாறு அருகே சுப்புராயபுரம் எஸ்.எம்.எஸ். நகரில் உள்ள ஒரு வீட்டிலிருந்து புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சிறப்பு படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்புப் படை போலீஸார் அங்கு சென்று சோதனை செய்தபோது, மூட்டை மூட்டையாக ரூ. 3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டில் இருந்த காரைக்கால் மஸ்தான்பள்ளி வீதியைச் சேர்ந்த சங்கர் (எ) அன்பு (48) என்பவரை போலீஸார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் மண்டல காவல் கண்காணிப்பாளர் வீரவல்லபன், ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் பிரவீன்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். திருநள்ளாறு போலீஸார் வழக்குப் பதிந்து சங்கரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.