காரைக்கால் அருகே உள்ள மண்டபத்தூர் கடற்கரையில் பல்வேறு கோயில்களில் இருந்து சுவாமிகள் எழுந்தருளி, மாசி மகத் தீர்த்தவாரி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் பல்வேறு பெருமாள் கோயில்களில் இருந்து உத்ஸவப் பெருமாள் எழுந்தருளி, மாசி மகத் தீர்த்தவாரி நடைபெறுவதும், இதேபோல், சிவன் கோயில்களில் இருந்து சுவாமிகள் மண்டபத்தூர் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவதும் சிறப்புக்குரிய நிகழ்வாகும். திருமலைராயன்பட்டினம் பகுதி பெருமாள் தீர்த்தவாரியில் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இது மாலை நிகழ்வாக நடத்தப்படுகிறது.
இதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருவேட்டைக்குடி ஸ்ரீ திருமேனியழகர் கோயில், வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மேலகாசாகுடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் மற்றும் பல்வேறு கோயில்களில் இருந்து ஸ்ரீ வைத்தியநாதன், தையல்நாயகி, சண்டிகேஸ்வரர், விநாயகர், முருகன், அர்ச்சுணன் உள்ளிட்ட 10 சுவாமிகள் அந்தந்த கோயில்களில் இருந்து சிறப்பு அலங்காரத்தில், மாசி மகத் தீர்த்தவாரி தரும் வகையில் செவ்வாய்க்கிழமை காலையில் புறப்பட்டு, மண்டபத்தூர் கடற்கரைக்கு வெவ்வேறு வாகனங்களில் பகல் 12 மணியளவில் வந்தடைந்தனர்.
மீனவ கிராமங்களில் இருந்து மக்கள் அப்பகுதிக்கு சென்று சுவாமிகளின் தீர்த்தவாரியில் பங்கேற்று, அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.
இந்த வழிபாடு குறித்து மீனவ கிராம மக்கள் கூறியது:
காரைக்கால் மாவட்ட சமுத்திரத்தில் பெருமாளும், சிவன் கோயில்களில் இருந்து சுவாமிகளும் தீர்த்தவாரியில் ஈடுபடுவது, மீனவ மக்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை கொண்டு வழிபடுகிறோம் என்றனர்.
கடற்கரையில் சுவாமிகள் சுமார் 2 மணி நேரம் அருள்பாலித்தனர். பின்னர் அந்தந்தக் கோயில்களுக்குப் புறப்பாடு செய்யப்பட்டது. இதில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.வி. ஓமலிங்கம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.