தம்பியை கடப்பாரையால் அடித்துக் கொன்றதாக அண்ணன் கைது
By DIN | Published On : 07th January 2019 05:44 AM | Last Updated : 07th January 2019 05:44 AM | அ+அ அ- |

காரைக்காலில் தம்பியைக் கடப்பாரையால் தாக்கிக் கொலை செய்த அண்ணனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
காரைக்கால் தெய்தா வீதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் டேவிட் (35). இவர் இருசக்கர வாகனங்களைப் பழுதுபார்க்கும் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவரது அண்ணன் பூபேஸ் (எ) ஆனந்தராஜ் (39). வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தாராம். சனிக்கிழமை இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஆனந்தராஜை, ராஜேஷ் டேவிட் கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த ஆனந்தராஜ், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த ராஜேஷ் டேவிட்டை கடப்பாரையில் தாக்கினாராம். பலத்த காயமடைந்த ராஜேஷ் டேவிட், காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தார். இதுகுறித்து காரைக்கால் நகர போலீஸார் வழக்குப் பதிந்து, ஆனந்த்ராஜை கைது செய்தனர்.