அரசு ஊழியர் சம்மேளனத்தினர் பேரணி, ஆர்ப்பாட்டம்: 250 பேர் கைது

நாடு முழுவதும் நடந்த பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக காரைக்காலில்,  அரசு ஊழியர் சங்கங்களின்

நாடு முழுவதும் நடந்த பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக காரைக்காலில்,  அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தைச் சேர்ந்த  அரசு ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தினர்.
குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26 ஆயிரமாக உயர்த்த வேண்டும். 1.1.2004-க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட மற்றும் பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை  அமல்படுத்த வேண்டும். 
வீட்டு வாடகைப் படியை 1.1.2016 முதல் அமல்படுத்த வேண்டும். எம்.ஏ.சி.பி.க்கு உயர்த்தப்பட்ட தகுதியை ரத்து செய்ய வேண்டும். 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில், காரை பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தைச் சேர்ந்த  அரசு  ஊழியர்கள் புதிய பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நேரு வேளாண் கல்லூரி, அரசு சாலைப் போக்குவரத்துக் கழகம், மின்திறல் குழுமம், அங்கன்வாடி, பாப்ஸ்கோ, பாலிடெக்னிக், பி.கே.ஐ.டி. உள்ளிட்ட அனைத்து தன்னாட்சி, பொதுத் துறை மற்றும் கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கும் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட அரசு ஊழியர்கள், உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 1.1.2016 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும். உள்ளாட்சி மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலுவையின்றி சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. 
ஆர்ப்பாட்டத்துக்கு சம்மேளனத் தலைவர்  சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.கெளரவத் தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங், பொதுச் செயலாளர் அலாவுதீன், ஆசிரியர் கூட்டமைப்புத் தலைவர் முத்தமிழ் குணாளன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இதில், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளனத் தலைவர் அய்யப்பன், சம்மேளனப் பொருளாளர் மயில்வாகனன், பி.ஆர்.டி.சி. ஊழியர் சங்கத் தலைவர் சுப்புராஜ் மற்றும் பிபிசிஎல், பஜன்கோவா உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
250 பேர் கைது: ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்களின் பேரணி நடைபெற்றது. காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் பேரணி நடைபெற்றதால், இப்பேரணியை தடுத்து நிறுத்திய போலீஸார், பேரணியில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட சுமார் 250 பேரை கைது செய்தனர். இதனால், காரைக்கால் பாரதியார் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com