காரைக்காலில் நடைபெற்ற உயர்கல்வி கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் சிறந்த முறையில் செயல்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
காரைக்கால் மாவட்ட கல்வித்துறை மற்றும் சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் காரைக்காலில் ஜனவரி 10, 11-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
இதில், கல்விசார்ந்த காட்சிகளை சிறப்பான முறையில் அமைத்திருந்த காரைக்கால் அக்கரைவட்டம் அரசு உயர்நிலைப் பள்ளி முதலிடத்தையும், ஆர்.எம்.ஏ.எஸ்.பி. பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றது. இப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பன்வால் பரிசுகளை வழங்கி வாழ்த்து
தெரிவித்தார்.
இதேபோல், கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் சிறப்பாக செயல்பட்ட கல்லூரி மாணவர்கள், சமுதாய நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ. அல்லி, கல்வித்துறை துணை இயக்குநர் கேசவ், சமுதாய நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.