பொங்கல் விழாவையொட்டி, காரைக்கால் சந்தையில் பொங்கல் பானை, கரும்பு, பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை அமோகமாக விற்பனையானது.
காரைக்கால் - திருநள்ளாறு சாலையில், வாரச்சந்தை உள்ளது. இச்சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும். இச்சந்தைக்கு காரைக்கால் மாவட்ட பகுதிகளுக்குள்பட்ட பொதுமக்கள் வருகை தந்து வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்கிச் செல்வது வழக்கம்.
இதனால் அன்றைய தினம் சந்தைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாகவே
இருக்கும்.
இந்நிலையில், பொங்கல் விழாவையொட்டி, காரைக்கால் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை திரளான பொதுமக்கள் பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்துகள், காய்கறிகள் மற்றும் மாட்டுப் பொங்கலுக்குத் தேவையான நெட்டி மாலைகள் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனர்.