காரைக்கால் அருகே சரக்கு ஆட்டோ மோதியதில் காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார்.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி அண்ணா நகரைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மணிகண்டன் (31). இவர், சனிக்கிழமை காரைக்கால் தீயணைப்பு நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர் திசையில் அதிவேகமாக வந்த சரக்கு ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவான சரக்கு ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.