தென்னிந்திய பளு தூக்கும் போட்டியில் பங்கேற்கச் செல்லும் மாணவியை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு உதவியை வளர்ச்சிக் குழு செய்தது.
காரைக்கால் பிள்ளைத்தோட்டம், வள்ளலார் நகரை சேர்ந்த முத்துச்சின்னப்பன் மகள் சோஃபியா. இவர் கடந்த 2018 -ஆம் ஆண்டு பளு தூக்கும் பல போட்டிகளில் பங்கேற்றார். தெலங்கானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தங்கப் பதக்கமும், கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தென்னிந்திய போட்டியில் வெள்ளிப் பதக்கமும், புதுச்சேரி மாநில அளவிலான போட்டியில் தங்கப் பதக்கமும், அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 8 -ஆவது இடத்திலும் என பல போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் வகித்தார்.
ஜன. 1 முதல் 20 -ஆம் தேதி வரை தென்னிந்திய அளவிலான சப்-ஜூனியர் பிரிவு மற்றும் சீனியர் பிரிவில் 63 கிலோ எடைப் பிரிவில் இவர் பங்கேற்கிறார். இவரை ஊக்கப்படுத்தும் விதமாக, காரைக்கால் வளர்ச்சிக் குழு சார்பில் அதன் தலைவர் ராஜ. லட்சுமணன், துணைத் தலைவர்கள் பொன். வேலாயுதம், புத்திசிகாமணி, செயலர் வின்சென்ட்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், கடந்த திங்கள்கிழமை ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள், போட்டியில் பங்கேற்கச் செல்வதற்கான செலவுத் தொகையை வழங்கி வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வளர்ச்சிக் குழுப் பொருளாளர் எம். பாலமுருகன், இணைச் செயலர் ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.