நடைபாதை சீரமைப்புப் பணி தாமதம்: பொதுமக்கள் அவதி

காரைக்கால் பகுதியில் நடைமடை சீரமைப்புப் பணி மந்தமாக நடைபெறுவதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


காரைக்கால் பகுதியில் நடைமடை சீரமைப்புப் பணி மந்தமாக நடைபெறுவதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காரைக்கால் நகரப் பகுதி சாலைகளில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம், நகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியது. யாரும் அகற்ற முன்வராததால், மாவட்ட நிர்வாகம் பாரதியார் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றத்தை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கியது. எதிர்ப்பு பல நிலைகளில் வந்ததால், நகராட்சி நிர்வாகத்தால் சாலையோர கடைக்காரர்களுக்கு, கடையின் முகப்பில் எவ்வளவு தூரம் சொந்தம் என்பதை குறியீடு செய்து தரப்பட்டது. 
பாரதியார் சாலையில் குறிப்பிட்ட 100 மீட்டர் தூரத்தில் நடைபாதையை மாவட்ட நிர்வாகம் சார்பில் சீரமைப்பதற்காக சாலையின் இருபுறங்களிலும் நடைமேடை இடிக்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் முழுமையாக நிறைவுப் பெறவில்லை. இந்த பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களது கடை வாயிலில் படிகள் போல மணல் மூட்டைகளையும், தற்காலிக படிக்கட்டுகளை அமைத்துக்கொண்டுள்ளனர்.
இடிபாடு செய்யப்பட்ட பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையப் பகுதியில் மட்டும், மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படவோ, தற்காலிக படிக்கட்டுகள் அமைப்பு ஏற்படுத்தவோ செய்யாமல் நிர்வாகம் உள்ளதாக புகார் கூறப்படுகிறது.
இதனால் பகல் நேரத்தில் ஓரளவு சமாளித்து மையத்தில் ஏறிவிடுவோர், இரவு நேரத்தில் முதியோர், பெண்கள், பருமனான உடலமைப்பு உள்ளவர்கள் பலர் தடுமாறி கீழே விழுந்துவிடுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்படுவோர் இதுகுறித்து ஏடிஎம் வாயிலில் உள்ள பாதுகாவலரிடம் கூறினால், வங்கி அதிகாரிகளிடம் தெரிவிக்க கூறுகிறார்களாம். அதிகாரிகளிடம் தெரிவித்தால், எந்தவித மேல்நடவடிக்கை குறித்தும் கருத்து தெரிவிப்பதில்லையாம்.
நடைமேடை சீரமைப்பு செய்வதில் மாவட்ட நிர்வாகமும் அலட்சியமாக இருக்கிறது. தமது வாடிக்கையாளர் பாதிக்கப்படக் கூடாது என கருதி, வங்கி நிர்வாகமும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
பிரதான வங்கி ஏடிஎம்-ஆக பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் உள்ள நிலையில், நாள் முழுவதும் வங்கி நேரத்தில் கூட வரிசையில் மக்கள் நின்று மையத்தை பயன்படுத்துகின்றனர். எனவே, வாடிக்கையாளர்  நலன் கருதி வங்கி நிர்வாகமும், மக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com