மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி மாவட்ட துணை ஆட்சியரிடம் புதன்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அ. ராஜா முஹம்மது தலைமையில் மாவட்டச் செயலாளர் ஷாஜஹான் , தமுமுக மாவட்ட செயலாளர் கமால் ஹூஸேன் , நகரத் தலைவர் ஜெஹபர் சாதிக் , நகர துணைச் செயலாளர் தீன் ஆகியோர், லயன்கரை பகுதியில் வாழும் மக்கள் சிலருடன் மாவட்ட துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: காரைக்கால் வள்ளல் சீதக்காதி லயன்கரை பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக வசிக்கும் எங்களுக்கு குடியிருப்பு பட்டா இல்லாத காரணத்தால், அடிப்படை வசதிகளான மின்சாரம் , கழிப்பறை , அரசால் கல்வீடு கட்டத் தரப்படும் மானியத் தொகை போன்ற எந்த ஒரு சலுகைகளையும் பெற முடியாமல் உள்ளோம். குடியிருப்புப் பகுதியை நேரில் ஆய்வு செய்து தற்போது வசிக்கும் இடத்துக்கு பட்டாவோ அல்லது வேறொரு தகுதியான இடத்தில் குடியிருப்பு மனைப்பட்டா வழங்கி, வீடு கட்ட மானியத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ராஜா முஹம்மது கூறும்போது, "மாவட்ட ஆட்சியரையும், துணை ஆட்சியரையும் சந்தித்துப் பேசினோம். கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு விரிவான விளக்கத்தை கேட்டறிந்த துணை ஆட்சியர், இதன் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படுமென தெரிவித்தார்' என்றார்.