நாகை மீனவர் கடலில் தவறி விழுந்து மாயம்
காரைக்கால் மீனவரின் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர், நிலைதடுமாறி கடலில் விழுந்து திங்கள்கிழமை மாயமானார்.
காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தவேலு. இவருக்குச் சொந்தமான படகில், நாகை கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் செல்வம் (38) உள்பட 12 பேர் கடலுக்கு மீன்பிடிக்க கடந்த 15-ஆம் தேதி சென்றனர்.
அவர்கள், திங்கள்கிழமை காலை கல்பாக்கம் பகுதி அருகே மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, படகிலிருந்த செல்வம் நிலை தடுமாறி கடலில் விழுந்துள்ளார். சக மீனவர்கள் அவரை தேடும் பணியை மேற்கொண்டும், செல்வத்தைக் கண்டறிய முடியவில்லையாம். இதுகுறித்து படகு உரிமையாளர் ஆனந்தவேலுவிடம் கேட்டபோது, மீனவப் பஞ்சாயத்தாருக்கும், கடலோரக் காவல் படைக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், காணமாமல் போனவரை கண்டுபிடிக்க கடலோரக் காவல் படையின் உதவி கோரப்பட்டுள்ளது என படகு உரிமையாளர் தெரிவித்தார்.