ஹஜ் பயணம் செல்வோருக்கு இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை என புதுச்சேரி அரசு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
காரைக்கால் யூனியன் பிரேதசப் போராட்டக் குழு அமைப்பாளர் ஏ.எஸ்.டி. அன்சாரி பாபு வெளியிட்ட அறிக்கை:
இந்திய நாட்டில் வாழும் இஸ்லாமியர்கள் அரசு ஹஜ் கமிட்டி மூலமாக ஆண்டுதோறும் ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் வாழும் இஸ்லாமியர்கள் 84 பேர் இந்த ஆண்டும் புனித ஹஜ் பயணத்தை அரசு ஹஜ் கமிட்டியின் மூலம் விண்ணப்பித்து செல்ல உள்ளனர். ஹஜ் பயணம் செல்வோருக்கு நோய்த் தாக்கம் ஏற்பட்டுவிடாமல் இருக்கும் வகையில் தடுப்பூசி போட்டு அனுப்புவது வழக்கத்தில் உள்ளது. தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்ல உள்ள 5 ஆயிரம் பயணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இது மட்டும்லாமல் அவர்களுக்கு மானியம் வழங்குவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. ஆனால் புதுச்சேரி அரசு ஹஜ் கமிட்டி சார்பில், ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள 84 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்படுவதற்கான எந்தவித நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை. புதுச்சேரி அரசு மூலம் மானியம் வழங்கப்படுவதற்கான அறிவிப்பும் செய்யப்படவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் இருந்து புனிதப் பயணம் மேற்கொள்ள உள்ளோர் தவிப்பில் உள்ளனர்.
புதுச்சேரி மாநில ஹஜ் கமிட்டியின் நிர்வாகச் செலவுக்கு அரசு ரூ. 8 லட்சம் ஒதுக்கீடு செய்து வந்தது. தற்போது இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏழு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமலும் உள்ளது. புதுச்சேரி மாநில அரசு ஹஜ் கமிட்டி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்காலம் 2004-ஆம் ஆண்டிலேயே முடிந்து விட்டது. கடந்த 15 ஆண்டுகளாக ஹஜ் கமிட்டி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதால் மத்திய அரசின் ஹஜ் கமிட்டி சார்பில் நிதி பெறக்கூட முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அரசு மூலம் ஹஜ் பயணம் செல்ல புதுச்சேரி மாநில ஒதுக்கீடு ரத்தாகி விடும் நிலை ஏற்படும். இது புதுச்சேரி மாநிலத்தில் வாழும் இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகி விடும். புதுச்சேரி அரசு சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள பயணிகளுக்கு தடுப்பூசி உடனடியாக போடவும், கடந்த ஆண்டு போல இந்தாண்டும் புதுச்சேரி அரசின் மானியமும் வழங்க ஆவன செய்ய வேண்டும்.
புதுச்சேரி மாநில ஹஜ் கமிட்டி தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கையில் அரசு மெத்தனப் போக்கை காட்டாமல், உரிய நேர்மறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.