மழை வேண்டி தவ்ஹீஜ் ஜமாஅத் நிரவி கிளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தமிழகம், புதுவையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் பாதித்துள்ளதோடு, குடிநீருக்கும் சிரமத்தை மக்கள் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சியை போக்குவதற்கு மழை மட்டுமே தீர்வாக அமையும் என வழிபாட்டுத் தலங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி, காரைக்கால் மாவட்டம், நிரவி கிளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை மழை வேண்டிய பிரார்த்தனையாக வாழைக்கொல்லைத் தெரு திடலில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் நிரவி இமாம் முஹம்மது யூசுப் தொழுகையை முன்னின்று நடத்தினார். ஏராளமான ஆண்களும், பெண்களும் தொழுகையில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிளைத் தலைவர் ஹபீபுல்லா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.