அம்பகரத்தூர் சித்தி விநாயகர் கோயில் அருகே உள்ள 2 மதுக்கடைகள் வேறு இடத்துக்கு மாற்றப்படாததைக் கண்டித்து பாமகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்கால் மாவட்ட பாமக செயலர் க.தேவமணி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள், அம்பகரத்தூர் பொதுமக்கள் சிலர் இணைந்து மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜாவை கடந்த 10-ஆம் தேதி நேரில் சந்தித்தனர்.
திருநள்ளாறு கொம்யூனுக்கு உள்பட்ட அம்பகரத்தூரில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலைச் சார்ந்த சித்தி விநாயகர் கோயில் பிரதான சாலையோரத்தில் அமைந்திருக்கிறது. இக்கோயிலுக்கு 100 மீட்டருக்குள், அதாவது கலால் துறை சட்ட விதிகளை மீறி கோயிலுக்கு 65 மீட்டர் தூரத்தில் அரசு நிறுவனமான பாப்ஸ்கோ மதுக்கடை ஒன்றும், தனியார் மதுக்கடை ஒன்றும் நடத்தப்டுகிறது.
இக்கோயிலில் முறையான பூஜைகள் நடத்தப்படுவதோடு, பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வருவோர் சித்தி விநாயகர் கோயிலிலும் வழிபாடு நடத்திச் செல்கின்றனர். பத்ரகாளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமையில் ஆயிரக்கணக்கானோர் இரவு தங்கிச் செல்கின்றனர். இந்த மதுக்கடையால் பக்தர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. சித்தி விநாயகர் கோயிலிலும் மது அருந்திவிட்டு பலர் போதையில் கிடப்பதும், வாந்தி எடுத்து கோயிலின் புனிதத் தன்மையைக் கெடுக்கின்றனர். இக்கோயில் அருகே உள்ள குடியிருப்புவாசிகளுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இக்கடைகளை இடமாற்றம் செய்ய 28.9.2018 தேதியிட்டு கலால்துறை துணை ஆணையர் உத்தரவிட்ட போதிலும், அரசியல் குறுக்கீடுகளால் கடைகள் அங்கேயே நடத்தப்படுவதாக புகார் அளித்தனர்.
புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் புதுச்சேரி ஆட்சியாளர்களைக் கண்டித்து காரைக்கால் மாவட்ட பாமக சார்பில், காரைக்கால் பழைய ரயிலடி பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடியிருப்புவாசிகளையும், வெளியூர் பக்தர்களையும் வெகுவாக பாதிக்கும் இவ்விரு மதுக்கடைகளையும் வேறு இடத்துக்கு உடனடியாக மாற்ற வேண்டும். மாற்றப்படாத வரை தொடர் போராட்டத்தை பாமக நடத்தும் என நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தின்போது தெரிவித்தனர்.
கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.பழனிசாமி தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் வி.சி.கே. காமராஜ், திருமருகல் ஒன்றியச் செயலர் அரவிந்த் மற்றும் காரைக்கால் மாவட்ட கட்சி நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, கபீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.