மின்னணு முறையில் வருவாய்த்துறை மூலம் சான்றிதழ் மக்களுக்கு வழங்கும் முறை குறித்து வருவாய்த்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வருவாய்த்துறை மூலம் மக்களுக்கு குடியிருப்பு, வருமானம், ஜாதி, குடியுரிமை உள்ளிட்ட சான்றிதழ் வழங்கப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் இந்த சான்றிதழ்கள் ஒருங்கிணைந்த நிலையில் பிக் சான்றிதழ் என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு பள்ளிப் பருவத்திலேயே விண்ணப்பித்து இதனை பெற்றுக்கொள்ள வசதி உள்ளது. பொது சேவை மையம், வீட்டிலிருந்தபடியே என உரிய சான்றிதழுடன் கணினி மூலம் விண்ணப்பித்து, அது உரிய வருவாய் கிராம அதிகாரிக்கு சென்றடைந்து பரிசீலிக்கப்பட்டு, ஒப்புதல் தரப்பட்டவுடன், எந்த முறையில் விண்ணப்பித்தோமோ அவ்வாறே பதிவிறக்கம் செய்துகொள்ளும் மின்னணு வசதி அமல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை புதுச்சேரி அரசு செய்துவருகிறது.
இதன் மூலம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம், வருவாய்த்துறை தலைமை அலுவலகம் என மக்கள் அலையாமல், குறித்த காலத்தில் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் அமலுக்கு வரும் முன்பாக, வருவாய்த்துறையினருக்கு இதுதொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காரைக்காலில் முதல்கட்டமாக பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட துணை ஆட்சியர் (வருவாய்) எம்.ஆதர்ஷ் பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார். புதுச்சேரி தகவல் தொழில்நுட்பத்துறையிலிருந்து எம்.கார்த்திகேயன், திட்ட மேலாளர் ஏ.சந்திரபிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.
பாலிடெக்னிக் கல்லூரி கண்காணிப்பாளர் பாலு என்கிற பக்கிரிசாமி வரவேற்றார். பயிற்சியில் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உள்ளிட்ட, வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு நிலை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.