பங்குனி உத்திரத்தையொட்டி காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் - ரங்கநாயகித் தாயார் திருக்கல்யாண உத்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மகாலட்சுமியின் அவதார நட்சத்திரம் உத்திரம் என்பதால் பங்குனி மாத உத்திரத்தில் பெருமாள் கோயில்களில் திருக்கல்யாண உத்ஸவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் வளாகத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி மாலை மாற்றுதல், ஊஞ்சல் சேவை முடிந்து, திருக்கல்யாண மேடைக்கு தாயாரும் பெருமாளும் எழுந்தருளச் செய்யப்பட்டனர். யாத்ராதானம் முதல் திருக்கல்யாணத்துக்கான அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டு, தாயாருக்கு திருமாங்கல்யதாரணம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, வாரணமாயிரம் பாசுரம் படித்தல், தேங்காய் உருட்டும் வைபவம் ஆகியவையும் நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும் ஸ்ரீ ரங்கநாயகித் தாயார், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் சேர்த்தி நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு திருக்கல்யாண பிரசாதம் வழங்கப்பட்டது.