தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் சாவு: உறவினர்கள் சாலை மறியல்

காரைக்காலில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் உயிரிழந்ததையடுத்து,  மருத்துவரைக் கண்டித்தும்,  அந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க


காரைக்காலில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் உயிரிழந்ததையடுத்து,  மருத்துவரைக் கண்டித்தும்,  அந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
காரைக்கால் ஒப்பிலாமணியர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன் மனைவி மீனாட்சி (44). இவரது வயிறுப் பகுதியில் இருந்த கட்டியை அகற்றுவதற்காக, காரைக்கால் இலைக்காரத் தெருவில் உள்ள தனியார் மருத்துவ மையத்தில் கடந்த 19-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 20-ஆம் தேதி அறுவைச் சிகிச்சை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, அவருக்கு ரத்தப்போக்கு இருந்ததால், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு மார்ச் 22-ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால்,  செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரது சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
இதற்கிடையில், மீனாட்சியின் சாவில் சந்தேகம் இருப்பதாக  மாவட்ட ஆட்சியருக்கும், காவல்துறைக்கும் அவரது உறவினர்கள் சனிக்கிழமை புகார் அளித்தனர்.  இதுதொடர்பாக, காரைக்கால் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
இந்நிலையில், மீனாட்சியின் 2 மகள்கள் மற்றும் உறவினர்கள் காரைக்கால் காமராஜர் சாலையில் சனிக்கிழமை பிற்பகலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தவறான அறுவைச் சிகிச்சையால்தான் மீனாட்சி உயிரிழக்க நேரிட்டது என்றும், அவரது உடற்கூறு பரிசோதனையை சிறப்பு மருத்துவர்கள் குழு, விடியோ பதிவுடன் மேற்கொள்ளவேண்டும் என்றும், மீனாட்சியின் குடும்பத்தினருக்கு மருத்துவ மையத்தினர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மறியலை விலக்கிக் கொண்ட மீனாட்சியின் உறவினர்கள், மாவட்ட துணை ஆட்சியர் எம். ஆதர்ஷை சந்தித்துப் பேசினர். அப்போது, 4 மருத்துவர்களைக் கொண்ட குழுவினர், மீனாட்சியின் சடலத்தை உடற்கூறு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என துணை ஆட்சியர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.
இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com