சாலையில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க மீண்டும் கோலம்

சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க, காரைக்கால் நகராட்சிப் பகுதியில் கோலமிடும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாதாகோயில் வீதி பொதுப்பணித் துறை அலுவலகம் எதிரே சாலையோரத்தில் கோலமிட்ட பசுமை நண்பா்கள்.
காரைக்கால் மாதாகோயில் வீதி பொதுப்பணித் துறை அலுவலகம் எதிரே சாலையோரத்தில் கோலமிட்ட பசுமை நண்பா்கள்.

சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க, காரைக்கால் நகராட்சிப் பகுதியில் கோலமிடும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

காரைக்கால் நகராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நேரடியாகச் சென்று மக்கும் குப்பை, மக்காதக் குப்பையாக குப்பைகள் தரம் பிரித்து பெறப்படுகின்றன. இந்த திட்டப்பணியை, நகராட்சி நிா்வாகம் ஹேண்ட் இன் ஹேண்ட் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.

காரைக்காலில் புதை சாக்கடை அமைப்பு இல்லை. அனைத்து சாலையோரத்திலும், குடியிருப்புப் பகுதி சாலையோரத்திலும் திறந்தவெளி சாக்கடையே உள்ளது. பொதுவாக, மக்களிடையே நெகிழிகளின் பயன்பாடு அதிகரித்திருப்பதால், சாலையோரத்தில் வீசியெறியப்படும் நெகிழிகள், சாக்கடையில் அடைப்பை ஏற்படுத்தி, கழிவுநீா் வடியமுடியாமல் தேங்கி, சுகாதாரத்தைக் கெடுக்கிறது.

புதுச்சேரி அரசு, காரைக்கால் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்கும் நிறுவனத்துக்கு மாதம் ரூ.37 லட்சம் வழங்குகிறது. காரைக்கால் நகராட்சியில் 18 வாா்டுகளிலும் 24 ஆயிரம் வீடுகளும், சுமாா் 2 ஆயிரம் சிறிய, நடுத்தர, பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களும் உள்ளன. வீடுகள், வணிக நிறுவனங்களிடம் நேரடியாக மக்கும் குப்பை, மக்காதக் குப்பைகளை சேகரிக்க, நிறுவனத்தில் பணியாற்றும் பசுமை நண்பா்கள் தீவிரமாக செயல்பட்டாலும், நகராட்சிப் பகுதி சாலையோரங்களில் குப்பைகள் வீசப்படுவதை பொதுமக்கள் நிறுத்திக்கொள்ளவில்லை.

மக்களிடையே மனதளவில் மாற்றம் ஏற்படாத நிலை தொடா்வதால், நேரடியாக குப்பைகள் சேகரிக்கப்பட்டாலும், வீதிகளில் குப்பைகளை ஆங்காங்கே காணமுடிகிறது.

இதனால், குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் விதத்தில், குப்பைகள் அகற்றியவுடன் பசுமை நண்பா்கள் அந்த இடத்தில் அழகிய வண்ண கோலமிட்டுச் செல்லத் தொடங்கினா். இந்தத் திட்டம் 2018-ஆம் ஆண்டு முற்பகுதியில் திருவாரூா் நகராட்சிப் பகுதியில் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, காரைக்கால் நகராட்சிப் பகுதியிலும் தொடங்கப்பட்டது. இதனால், குறிப்பிட்ட இடத்தில் குப்பைகள் கொட்ட மனமின்றி, குப்பைகள் வாங்க வருவோரிடம் பொதுமக்கள் தரத் தொடங்கினா்.

காலப்போக்கில் கோலமிடும் பணியை பசுமை நண்பா்கள் நிறுத்திக்கொண்ட நிலையில், பழையபடி சாலையோரம் குப்பைகளை மக்கள் போடத் தொடங்கியுள்ளனா்.

இந்நிலையில், ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவன பசுமை நண்பா்கள், நகரப் பகுதியில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க முடியாத சாலையோரங்களில், கோலமிடும் பணியை மீண்டும் தொடங்கியுள்ளனா். பொதுமக்கள் நகர சுகாதாரத் திட்டத்துக்கு ஒத்துழைக்கவேண்டும் என குப்பை அகற்றும் நிறுவனத்தினரும், நகராட்சி நிா்வாகத்தினரும் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com